மாகாண மட்டத்தில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காண கவனம் : குறுந்தூர் விகாரையில் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு தொடர்பிலும் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 7, 2023

மாகாண மட்டத்தில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் காண கவனம் : குறுந்தூர் விகாரையில் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு தொடர்பிலும் கலந்துரையாடல்

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் சில நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் கலந்துரையாடபட்டது.

தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த விடயம் கலந்துரையாடபட்டது.

இக்கூட்டத்தில் தொல்பொருளியல் திணைக்களம், இலங்கை பொலிஸ், சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், கலாசார அலுவல்கள் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், பௌத்த அலுவல்கள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தேசிய நூதனசாலைத் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறுந்தூர் விகாரை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் மேற்கொண்ட தலையீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், தற்பொழுது இலங்கையில் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ள இடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக, மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் இந்தத் தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த இடங்களாக அடையாளம் காணப்பட்டு தற்பொழுது அழிந்து போயுள்ள அல்லது அழிந்து போகக்கூடிய இடங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, தொல்பொருளியல் இடங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத இடங்கள் மற்றும் அழிந்துள்ள மற்றும் அழிந்து போகும் அவதானம் கொண்ட இடங்களை மாவட்ட ரீதியாக குழுவுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர பரிந்துரைத்தார்.

மேலும், தொல்பொருளியல் நிதியமொன்றை ஆரம்பிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் தற்பொழுது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், இங்கு அழைக்கப்பட்டிருந்த ஏனைய நிறுவனங்கள் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு செயற்படுகின்றன என்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் வீரசேகர, உதய கம்மன்பில, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, ஜகத் குமார சுமித்ராறச்சி மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment