அலி சப்ரி ரஹீமின் பிரதிநிதித்துவம் இடைநிறுத்தம் : எதிர்க்கட்சித் தலைவரின் தீர்மானத்திற்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

அலி சப்ரி ரஹீமின் பிரதிநிதித்துவம் இடைநிறுத்தம் : எதிர்க்கட்சித் தலைவரின் தீர்மானத்திற்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றக் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இன்று (22) பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத துர்நடத்தை தொடர்பில் விசாரிப்பதற்காக அவ்விடயம் தற்போது பாராளுமன்றத்தின் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாலும், குறிப்பிட்ட உறுப்பினர் பாராளுமன்றத்தின் குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்து செயற்படுவதானது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் சிக்கல் தன்மையைத் தோற்றுவிப்பதாலும் மேற்படி விசாரணை முடிவுறும் வரை அலி சப்ரி ரஹீம் பாராளுமன்ற குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்தலாகாதென குறித்த தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல அவர்களினால் வழிமொழியப்பட்டதைத் தொடர்ந்து இதற்குப் பாராளுமன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டது.

74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.3 கிலோ கிராம் தங்கம் மற்றும் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 41 கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவந்த பாராளுமன்ற உறுப்பினரிடம் 7.5 மில்லியன் ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 

எனினும், 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை எடுத்து வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து 70 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாலும், எந்தக் காரணத்தின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினருக்கு குறைந்த தண்டப்பணம் அறவிடப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment