பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஏஎன்ஐ செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கனடா - இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறிய அமைச்சர் அலி சப்ரி, உறுதியான ஆதாரங்களின்றி இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவரென்பதால், அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லையென அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், ஆதாரங்களற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் இவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில் இனப் படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை கூறினார். இலங்கையில் இனப் படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில், இந்திய அரசாங்கம் உள்ளதென்ற கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ளது.
இச்சந்தர்ப்பத்திலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment