(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
தாக்குதல் நடத்திய சிறிய குழு ஒரே நேரத்தில் 8 இடங்களில் குண்டு வெடிக்கச் செய்யும் அளவுக்கு முடியுமாகியது தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதனால் இந்த குழுவின் பின்னால் இருந்து செயற்பட்ட சக்தி யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும். அதனால் இந்தத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். அத்துடன் பாதுகாப்புத் தரப்பில் இருந்துவந்த கருத்து முரண்பாடுகளும் இந்தத் தாக்குதலை தடுப்பதற்கு முடியாமல் போயிருப்பது தற்போது தெரியவருகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான விடயங்களை விசாரணை மேற்கொண்டு நாங்கள் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தோம். அதில் பல விடயங்களை தெரிவித்திருந்தோம். அந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்காமல் இந்த அரசாங்கம் அந்த அறிக்கையை குப்பை தொட்டியில் போட்டது.
அத்துடன் தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் சாட்சியம் தெரிவிக்கும்போது, இராணுவப் புலனாய்வில் 7 பேர் இருக்கின்றனர். 7 ரெஜிமன்ட் இருக்கிறது. ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்பில் ஒரு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தெரிவிக்கப்படாததன் காரணங்கள்தான் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இதனை மறைக்கும் சக்திகளும் இருக்கின்றன. அதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இதன் உண்மை சூத்திரதாரிகள் யார் என்பதை தேட வேண்டும்.
மேலும் சஹ்ரான் 2017 மார்ச் 10 இல் தலைமறைவாகி வெளிநாடு சென்றிருந்தார். அதன் பின்னர் 2019 தாக்குதல் இடம்பெற்ற நாள்வரை அவர் நாட்டின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு இல்லங்களில் மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது 7 ஆயிரம் புலனாய்வு அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்.
அதேபோன்று பயிற்சி முகாம்கள் நாட்டில் பல பிரதேசங்களிலும் நடத்தி இருக்கிறார்கள். அம்பந்தோட்டையில் மாத்திரம் 5 பயிற்சி முகாம்கள் நடத்தி இருக்கின்றார். இற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த புலனாய்வு பிரிவு தற்போது தகல்கள் வெளிவரும்போது நாட்டை காட்டிக் காெடுக்க வேண்டாம் என எங்களுக்கு தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தற்போது உயிருடன் இருக்கும் சாட்சியாக சஹ்ரானின் மனைவி இருக்கிறார். அவரை பயன்படுத்திக் கொண்டு உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்காமல், உண்மையை மறைத்ததாக தற்பாேது அவருக்கு எதிராகவும் பொலிஸார் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள்.
அதேபோன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்த வீட்டில் சாரா இருந்ததாக தெரிவிப்பதற்கு, குண்டு வெடித்து ஒரு வார காலத்துக்கு பின்னர் அவரின் அடையாள அட்டை ஒன்றை பொலிஸார் நீதிமன்றில் ஒப்படைத்திருக்கின்றனர். அந்த அடையாள அட்டையில் ஒரு கீறேனும் பட்டதில்லை. புத்தம் புதிய அடையாள அட்டை. சாரா அங்கு இருந்தார் என்பதை நிரூபிக்கவே இவ்வாறு அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு அங்கு போடப்பட்டிருக்கிறது.
ஆனால் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பின்னர் சாரா ஜெஸ்மினின் குரல் ஓசை கேட்டதாக ஹாதியா சாட்சியமளித்திருக்கிறார். ஆனால் தற்போது ஹாதியாவை அச்சுறுத்தி சில விடயங்களை மறைத்திருப்பது தற்போது விசாரணைகளில் வெளிவந்திருக்கின்றன.
அதேபோன்று தாக்குதல் இடம்பெறப்பாேவதாக தகவல் வழங்கிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு வந்து பாதுகாப்பு பிரிவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி சென்றிருக்கிறார்.
அத்துடன் தாக்குதல் நடத்திய சிறிய குழு ஒரே நேரத்தில் 8 இடங்களில் குண்டு வெடிக்கச் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு முடியுமாகியது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கே சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அதனால் இந்த குழுவின் பின்னால் இருந்து செயற்பட்ட சக்தி யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.
அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். இந்த தாக்குதல் தொடர்பான தகவலை யார் திசை திருப்பினார்கள், போன்ற விடயங்களை தேட வேண்டும்.
அதேபோன்று தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் தேடிப்பார்க்க வேண்டும். அத்துடன் தாக்குதலுடன் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல் தொடர்பாகவும் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment