பிள்ளையானை முறையாக விசாரணை செய்ய வேண்டும் : ரணில் ஆட்சியில் குண்டுத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காது - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 5, 2023

பிள்ளையானை முறையாக விசாரணை செய்ய வேண்டும் : ரணில் ஆட்சியில் குண்டுத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காது - நளின் பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டது உண்மையாகியுள்ளது. சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும். ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் நீதி கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற ஆயுர்வேதம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே செனல் 4 காணொளி வெளியீடு குறித்து கலக்கமடைந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இவ்விடயத்தை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம். எமது அணியில் இருந்து இந்த விடயங்களை குறிப்பிட்ட மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று ஆளும் தரப்பு பக்கம் சென்றுள்ளார்கள்.

அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் இருந்து அவருடன் நெருக்கமாக செயற்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் நிதி விவகாரங்களை இவரே முகாமைத்துவம் செய்துள்ளார். 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறையில் இருந்த சஹ்ரான் உட்பட அவரது தரப்பினரும் சிறையில் இருந்த சந்திரகாந்தன் ஒரு அணியாக ஒன்றிணைந்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளார். பிள்ளையான், சுரேஷ் சலே ஊடாக சஹ்ரான் உட்பட அவரது குழுவினர் வனாத்தவில்லு பகுதியில் சந்தித்துள்ளார்கள். இது பாரதூரமானதொரு விடயமாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவதை போன்று இதை அலட்சியப்படுத்த முடியாது.

சிறையில் இருந்தவாறு பிள்ளையான் புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே ஊடாக தன்னை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்துகிறார். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் ஆட்சியை கைப்பற்றுவதை நோக்காக கொண்டுள்ளது என்பதை ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் ,புலனாய்வு பிரிதானி சுரேஷ் சலே தொடர்பில் நாங்கள் குறிப்பிட்ட விடயம் உண்மையாகியுள்ளது.

சனல் 4 வெளியிட்ட காணொளியை விமர்சிப்பதை விடுத்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான், சுரேஷ் சலே ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும். அன்ஷிப் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். இதனை விடுத்து ஆளும் தரப்பினர் சனல் 4 நிறுவனத்தையும், ஜெனிவா விவகாரத்தையும் விமர்சிக்கிறார்கள்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே அன்ஷிப் அசாத் மௌலானா 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். புலனாய்வு பிரிவின் பிரதம பொறுப்பதிகாரி சுரேஷ் சலே ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான தகவல்களை கர்தினாலுக்கும் பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியதாக கேட்டு அன்ஷிப் அசாத் மௌலானாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். ஆகவே இவ்விடயத்தை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாமல் இருக்க முடியாது.

அதிகாரத்துக்காக ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சர்வதேச மட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற நிலையில் ராஜபக்ஷர்களுடன் இணைந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. ராஜபக்ஷர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படமாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம் - சிங்கள மக்கள் முரண்பட்டார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகவே இவர்களுக்கு சர்வதேச விசாரணையுடன் நீதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment