ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு ! மண்சரிவு, வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Friday, September 29, 2023

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு ! மண்சரிவு, வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை !

நில்வளா கங்கையை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சி தொடரும்
நாட்டில் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்படுகிறது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (30) 75 மில்லி மீற்றர் அளவுக்கு மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிரதேசத்தில் மேற் பிரதேசத்திலும், வடமேல் மாகாணத்திலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றருக்கு காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்.

இடியுடனான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளப் பெருக்கு அபாயம்
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையால் களுகங்கை, ஜின் கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஆற்று படுக்கைகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டல திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

நில்வளா கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நில்வளா கங்கையின் தாழ்வான பகுதிகளான கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட மாத்தறை, மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் நீரில் மூழ்கின. ஆகவே இப்பகுதியில் வசிப்பவர்கள் அவதானத்தடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
காலி மாவட்டத்தில் எல்பிடிய பிரதேச செயலகப் பிரிவு, அம்பாந்தோட்டை மாவட்டம் வலஸ்முல்ல பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டம் வலல்லாவிடி, மதுகம, அகலவத்தை, புளத்சிங்கள, கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, தெஹியோவிட, தெரணியாகல, யடியந்தொட்ட, மாத்தறை மாவட்டத்தில் முலதியன, அதுரலிய, இரத்தினபுரி மாவட்டத்தில் இம்புளே, கொலன்ன ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற (நிலை 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவு, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரளே, மாத்தறை மாவட்டத்தில் கடபொல, பிடபத்தெர, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம, பெல்மடுல்லகுருவிட, கலவான, எஹலியகொட, கிரிவுல்ல, இரத்தினபுரி, எலபாதே, நிவிதிகல ஆகிய பகுதிகளுக்கு செம்மஞ்சள் நிறத்திலான (நிலை 2) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு, பாறை சரிவு, நிலம் தாழிறக்கம் குறித்து அவதானமாக இருக்குமாறும். தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment