ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத் தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின் (செக் குடியரசு தூதுவர்) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்துக்கு நடைபெறவுள்ளது.
அதன்படி 54 ஆவது கூட்டத் தொடரின் முதலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் ஆரம்ப உரை இன்று (11) இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்படும்.
அதற்கு இலங்கை சார்பில் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக தலைமையிலான பிரதிநிதிகள் குழு பதிலளிக்கும்.
இக்கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாத போதிலும், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதுடன் இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்கும்.
அதேபோன்று கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் இடம்பெறும்.
இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள், அச்சம்பவங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்படும்.
No comments:
Post a Comment