கிழக்கு ஆளுநரின் செயற்பாடுகள் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணம் : குறுகிய காலத்தில் பாரிய சேவை செய்துள்ள செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 6, 2023

கிழக்கு ஆளுநரின் செயற்பாடுகள் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணம் : குறுகிய காலத்தில் பாரிய சேவை செய்துள்ள செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் பாராட்டு

நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர்கள், அந்ததந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, நேற்று ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர், செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு மாத காலங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 700 ஆசிரியர் நியமனம், 5,000 இளைஞர்களுக்கு IT வேலை வாய்ப்பு, இந்திய அரசிடமிருந்து 2,371 மில்லியன் கடனற்ற நிதியுதவி, ஜப்பான் அரசுடன் இணைந்து அருகம்பேவில் நீர்ச் சறுக்கல் (surfing) ஆரம்பித்தல், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்தல், கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக Cordelia Cruise கப்பலை வரவழைத்தமை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி உரிமை பெற்றுக் கொடுத்தமை, கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் கிலோ கிராம் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், ஒரு இலட்சம் பிளாஸ்டிக் அல்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு கடற்கரைகள் சுத்தம் செய்யப்பட்டமை, சட்ட ஒழுங்கை சீராக செயற்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன், ஆளுநர் மத சார்பற்ற வகையில் நியாயமான முடிவுகளை அனைவருக்கும் உதவும் வகையில் செயற்படுவதாகவும் அறியக் கூடியாதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நியாமான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்பியும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை, ஆனால் ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்ற பிறகு, ஓரளவேனும் நியாயமான முறையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (DCC) நடத்தக்கூடியதாக உள்ளது என சுட்டிக்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment