பாறுக் ஷிஹான்
அரச பாடசாலையொன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்த சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு திங்கட்கிழமை (7) சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியருக்கு 14 நாட்கள் விளக்கமறியலும் இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள பாடசாலை அதிபருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்ப் பகுதியிலுள்ள பிரபல அரச பாடசாலையொன்றில் உடற்கல்வி ஆசிரியராகச் செயற்பட்டு வந்துள்ள சந்தேகநபர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி விளையாட்டறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவனை துன்புறுத்தலுக்குட்படுத்த முயற்சித்ததாகத் தெரிவித்து ஆகஸ்ட் 2ஆம் திகதி அம்மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தலைமைறைவாகியிருந்த சந்தேகநபரான ஆசிரியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) மாலை தனது சட்டத்தரணியூடாக பொலிஸில் சரணடைந்த நிலையில், சந்தேகநபரை நிந்தவூர் பொலிஸார் திங்கட்கிழமை (07) சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பாடசாலையின் அதிபராக ஏ. அப்துல் கபூர் என்பவரும் உடற்கல்வி ஆசிரியராக 47 வயது மதிக்கத்தக்க ஏ.பைஸர் என்பவரும் செயற்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment