(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றத்தில் உள்ள ஆண் விபச்சாரி ஒருவர் கட்சித் தலைவராகும் நோக்கில் செயற்படுகிறார். என் வாயை அவர் குழப்பிக் கொள்ளக்கூடாது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
225 உறுப்பினர்களில் யார் அந்த ஆண் விபச்சாரி, தகாத வார்த்தைகளை குறிப்பிடும்போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டு அதை இரசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகரை நோக்கி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாக்களின்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத், தனியார் ஊடகம் கடந்த காலங்களில் எனக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டது.
பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அந்த ஊடகம் அழைக்கப்பட்டபோது தவறை ஏற்றுக் கொண்டார்கள். அந்த தனியார் ஊடகத்தைப் போன்று பாராளுமன்றத்தில் ஆண் விபச்சாரி ஒருவர் செயற்படுகிறார்.
கட்சித் தலைவராகும் நோக்கத்தில் இருந்துகொண்டு செயற்படும் கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் ஆண் விபச்சாரி போல் செயற்படுகிறார். ஆகவே, அந்த ஆண் விபச்சாரி எம்மை குழப்பிக் கொள்ளக் கூடாது என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், இந்த உறுப்பினருக்கு உரிய பாராளுமன்ற உறுப்பினருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் காணப்படலாம். அதை அவர் முறையாக அணுக வேண்டும். அதை விடுத்து பாராளுமன்றத்துக்கு பொறுத்தமற்ற வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது.
பாராளுமன்ற களரியில் பாடசாலை மாணவர்கள் உள்ளார்கள். இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பது முறையற்றது. சபைக்கு தலைமை தாங்கும் நீங்கள் (பிரதி சபாநாயகரை நோக்கி) இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சகல உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அந்த அமைச்சர் என்ன உரையாற்றுவார் என்பது எனக்கு தெரியாது. ஆகவே சபைக்கு தலைமை தாங்குபவர் மீது மாத்திரம் பொறுப்பை சுமத்த வேண்டாம் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அந்த பாராளுமன்ற உறுப்பினர் (சாமர சம்பத்) ஆண் பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டார். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யார் அந்த ஆண் பாராளுமன்ற உறுப்பினர் என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆண் விபச்சாரி இருப்பாராயின் அதை அவர் வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.
பாராளுமன்றத்துக்கு பொறுத்தமற்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறைந்தபட்சம் விபச்சாரி என்ற வார்த்தையையேனும் நீக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, வாய் மொழி கேள்வியின்போது விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பதிலளித்துக் கொண்டிக்கிறார்.
இடையில் பொருத்தமற்ற வகையில் அந்த உறுப்பினர் (சாமர சம்பத்) எழுந்த முறையற்ற வகையில் பேசுகிறார். சபைக்கு தலைமை தாங்கும் நீங்கள் (பிரதி சபாநாயகரை நோக்கி) அதை ரசித்துக் கொண்டிருக்கின்றீர்கள். நாங்கள் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள்தான் சபையை முறையாக வழிநடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, ஒழுங்குப் பிரச்சினை என்று குறிப்பிட்டு அவர் எழுந்து உரையாற்றினார். விடயதானத்துக்கு அமைய ஒரு சிலர் உரையாற்றுவதில்லை. இவ்விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment