பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் 24.08.2023 அன்று கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைக்கப்பட்டிருந்தது.
இதில் 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டதுடன், பொது நிர்வாக, உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அசோக, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த உள்ளிட்ட அதிகரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டன.
சட்டத்தைப் புதுப்பித்தல்
2007ஆம் ஆண்டு 26ஆம் இலக்க தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழு சுட்டிக்காட்டியதுடன், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்தது.
பணிப்பாளர் நாயகம் குறித்த பிரச்சினை
2008ஆம் ஆண்டில் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட பணிப்பாளர் நாயகம் 2019ஆம் ஆண்டு பணி நிறுத்தம் செய்யப்பட்டு 2020ஆம் ஆண்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக இங்கு தெரியவந்தது.
முறையான ஒழுக்காற்று விசாரணைகள் இன்றி பணி நிறுத்தம் செய்யப்பட்டிருந்த காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவாக 556,108 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், இவர் ஏற்கனவே இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்திருப்பதாகவும் தெரியவந்தது.
இந்த அதிகாரி தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைக் கையளிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், நிறுவனத்தின் முக்கிய பதவியான பணிப்பாளர் பதவிக்கு பதில் அதிகாரி ஒருவரை விரைவில் நியமிக்குமாறும், புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
புதிய கட்டடத்திற்குச் செல்ல இரண்டு வார அவகாசம்
பணியாளர்கள் 29 பேரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு 5 மாடிகளைக் கொண்ட கட்டடம் 12.5 இலட்சம் ரூபாவுக்கு வாடகைக்குப் பெற்றுக் கொண்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
2017ஆம் ஆண்டு வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்தக் கட்டடத்திற்குப் பணம் செலவு செய்வது வீணானது என்பது பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வாடகை ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி முடிவடைந்துள்ளது என்பதும் தெரியந்தது. இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
பயிற்சிப் பாடநெறிகளை முன்னெடுக்கும் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை
இந்த நிறுவனத்தின் மொழி பயிற்சி பாடநெறிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்க அதிகாரிகள் மொழிப் புலமையைப் பெற்றிருப்பது கட்டாயம் என்ற பின்னணியில் பாடநெறிகளை முன்னெடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 15% மட்டுமே இந்த நிறுவனம் பெறுகிறது என்பதும் தெரியவந்தது. இதன் ஊடாகப் பாடநெறிகளின் தரம் தொடர்பிலும் சிக்கல்கள் ஏற்படும் என கணக்காய்வாளர் நாயகம் இங்கு சுட்டிக்காட்டினார்.
எனவே, அமைச்சுடன் இணைந்து முடிவெடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
அமைச்சின் தலையீடு போதுமானதாக இல்லை
பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் அமைச்சின் தலையீடு இதனைவிட அதிகமாக இருக்க வேண்டும் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
இதனால், அமைச்சுக்கு வெளியில் அந்த நிறுவனம் இயங்கினால் கிடைக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதனைவிடவும், கொள்முதல் வழிகாட்டலுக்கு அப்பால் 2019ஆம் ஆண்டு வானொலி நிகழ்ச்சியொன்றுக்காக 15 மில்லியன் ரூபாவும், தெலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காக 4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை வழங்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிறுவனம் தன்னிறைவு அடையும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும், 162 மில்லியன் ரூபாவை வைப்பிலிட முடிந்திருப்பதாகவும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், குழுவினால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு ஆறு மாதங்களில் குறித்த நிறுவனத்தை மீண்டும் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, நளீன் பண்டார ஜயமஹா, எஸ்.எம். மரிக்கார், உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சாணக்கியன் இராசமாணிக்கம், சட்டத்தரணி மதுர விதானகே மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment