உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே தெரிவித்திருந்த திகதியான கடந்த மார்ச் மாதம் 09 இல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ரல் அமைப்பு என்பன நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தன.
மேற்படி மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் மேற்படி மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிணங்க மேற்படி மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment