(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
டெங்கு ஒழிப்பு செயலணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். அது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க இருக்கிறோம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச டெங்கு ஒழிப்பு செயலணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். எதிர்க்கட்சித் தலைவரின் யோசனையை நாம் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக் கொள்கிறோம். டெங்கு ஒழிப்பு செயலணிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் ஏற்கனவே மூன்று அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க இருக்கிறேன்.
மேற்படி செயலணியில் உள்ளவர்கள் 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தரமாக்குவதற்கு அந்த தகைமையொன்றே போதும்.
அந்த ஊழியர்களுக்கு தினக் கொடுப்பனவாக 700 ரூபா மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அந்த கொடுப்பனவை பெற்றுக் கொண்டு அவர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
மேற்படி ஊழியர்கள் 2016 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். அப்போது அவர்களுக்கு அடிப்படை தகுதி எதுவும் இருக்கவில்லை. நாம் ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்திருந்தாலும் அவர்கள் மெனேஜ்மென்ட் சேர்விஸுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டது.
எனினும் நாம் இந்த நடவடிக்கையை கைவிடப் போவதில்லை. அதற்காக மீண்டும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment