(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிர்க்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் மூத்த பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. அதேவேளை, வலது குறைந்தவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் இவ்வாறு வழங்கப்படுவதில்லை அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், நிதி அமைச்சானது மக்களுக்கு வழங்கும் நிவாரண கொடுப்பனவுகளில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்கவில்லை. அவ்வாறான கொடுப்பனவுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏதாவது பிரதேச செயலாளர் பிரிவிற்கு அந்த கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை யென்றால் நாம் சமூக ஊக்குவிப்பு அமைச்சின் மூலம் அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment