வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து மோசடிகள் : எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து மோசடிகள் : எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய அரசாங்கம்

(நா.தனுஜா)

கனடாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் கல்வி பயின்று வருவதுடன், குறிப்பாக பெருமளவான இலங்கையர்கள் கனடாவில் உயர் கல்வி பயில்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்கம், இவ்வாறான மோசடிகள் இடம்பெறும் முறைகள் மற்றும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய வழிமுறைகள் தொடர்பில் அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் விரிவாக விளக்கமளித்துள்ளது.

குறிப்பாக கனடாவுக்கான வீசா அல்லது கனடாவில் வேலை வாய்ப்பு குறித்த உத்தரவாதத்தை எந்தவொரு நபராலும் வழங்க முடியாது என்றும், கனேடியத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களில் பணியாற்றும் குடிவரவு அதிகாரிகளால் மாத்திரமே வீசா விவகாரம் குறித்துத் தீர்மானிக்க முடியும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று இச்சேவைகளுக்கான கட்டணங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள கனேடிய அரசாங்கம், தமது ஊழியர்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்யுமாறு அல்லது தனிப்பட்ட பணப்பரிமாற்ற சேவையின் ஊடாகப் பணத்தை வைப்புச் செய்யுமாறு கோரமாட்டார்கள் என்றும் கனடாவுக்கு குடிபெயர விரும்புவோருக்கு விசேட சலுகைகள் எதனையும் வழங்கமாட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment