இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டு : குறுக்கு வழி, இடைத்தரகர்களை நாடுவதை தவிர்க்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 2, 2023

இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டு : குறுக்கு வழி, இடைத்தரகர்களை நாடுவதை தவிர்க்கவும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

(இராஜதுரை ஹஷான்)

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவை வினைத்திறகாக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை ஊடாக இரண்டு மணித்தியாலங்களுக்குள் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும். கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக குறுக்கு வழி, இடைத்தரகர்களை நாடுவதை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். திணைக்களத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு சிரமங்கள் இல்லாமல் சிறந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கடந்த ஆண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுகைக்கு அதிக கேள்வி காணப்பட்டதால் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நேரம், திகதி ஆகியவற்றை ஒதுக்கிக் கொள்வதற்காக நிகழ்நிலை முறைமையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

நிகழ்நிலை முறைமையின் கீழ் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஒருவர் குறைந்தபட்சம் மூன்று மாத காலம் காத்திருக்க வேண்டிய தன்மை காணப்பட்டதால் நிகழ்நிலை முறைமையின் கீழ் நேரம் மற்றும் திகதி ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் குறிப்பிடப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பம் கோரலுக்கான கேள்வி குறைவடைந்த காரணத்தால் நிகழ்நிலை முறைமையின் ஊடாக நேரம் மற்றும் திகதி ஒதுக்கிக் கொள்ளும் முறைமை கடந்த மாதம் (மே) 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் குறித்து புதிய வழிமுறையை பின்பற்றுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்ததை தொடர்ந்து கடவுச்சீட்டு விநியோகத்தை வினைத்திறனான முறையில் முன்னெடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கமைய வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்துக்கான பணிகள் காலை 07 மணி முதல் ஆரம்பமாகும். டோக்கன் முறையில் பொதுமக்கள் திணைக்கள வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் முறையாக சமர்பிக்கப்பட்டவுடன் டோக்கன் அடிப்படையில் விண்ணப்பதாரி அழைக்கப்படுவார்.

ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில் ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு 2 மணித்தியாலங்களுக்குள் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்போது எவ்வித அசௌகரியங்களுமின்றிய வகையில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும். ஆகவே வி;ண்ணப்பங்கள், ஆவணங்கள் தொடர்பில் பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பிரதேச சபை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் புதிய செயற்திட்டம் எதிர்வரும் இரு வார காலத்துக்குள் செயற்படுத்தப்படும்.

இந்த சேவை ஊடாக துரிதரக கடவுச்சீட்டு சேவையை 3 நாட்களுக்குள், சாதாரன சேவையை 14 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும். பதிவுத் தபால் ஊடாக வீட்டுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

அத்துடன் வெளிநாட்டு கடவுச்சீட்டின் பெறுமதி, அதனை பாவிக்கும் முறைமை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அறிவுறுத்தல அட்டை ஒன்று கடவுச்சீட்டுடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டு தொடர்பான பணிகளை இலங்கையின் குடியரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொண்டு நிகழ்நிலை முறைமை ஊடாக மேற்கொள்ளும் தொழில்நுட்ப வசதி எதிர்வரும் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தற்போது வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவை இல்லை. கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் குறுக்கு வழிகளையும் இடைத்தரகர்களையும் நாட வேண்டிய தேவை கிடையாது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளினால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் திணைக்களத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment