இலங்கையிலிருந்து கொரியாவுக்கு நேரடி விமான சேவை : வேலை வாய்ப்புகளுக்காக செல்பவர்கள் தாமதமாவதால் இம்முடிவு - மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

இலங்கையிலிருந்து கொரியாவுக்கு நேரடி விமான சேவை : வேலை வாய்ப்புகளுக்காக செல்பவர்கள் தாமதமாவதால் இம்முடிவு - மனுஷ நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொரியாவுக்கு தொழிலுக்கு செல்வபர்களின் நன்மை கருதி எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) தயாசிறி ஜயசேகர எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில், கொரியாவுக்கு வேலை வாய்ப்புக்காக செல்ல விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பல மணி நேரம் காத்துக்காெண்டு இருந்த பின்னர் திரும்பிச் சென்றுள்ளனர். தூரப்பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் இதனால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து கொரிய வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் நலன் கருதி மேற்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அந்த விமான சேவைகள் இடம்பெறும்.

கொரியாவுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் பயணிக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 470 இலக்க விமானம் நேற்று முன்தினமும் 12 மணித்தியாலங்கள் தாமதமாகவே பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த விமானப் பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலேயே நேரடி விமான சேவைகளை முன்னெடுப்பதற்காக கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மேற்படி சிக்கல்களுக்கு தீர்வு காணும் வரை தற்காலிகமாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூர் ஊடாக கொரியா சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரியாவுக்கான இந்த விமான சேவையில் அடிக்கடி இத்தகைய தாமதங்கள் ஏற்படுகின்றன. அதனால் ஏனைய நடவடிக்கைகளும் தாமதமடைகின்றன.

குறிப்பாக, கொரியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் எமது நாட்டவர்களை பொறுப்பேற்கும் நடவடிக்கையும் இதனால் தாமதமாகின்றது. அவர்களை பொறுப்பேற்க வருபவர்களும் தாமதமடைவதற்கு இது காரணமாகின்றது. அங்கு இவர்களை பொறுப்பேற்கும் மனித வள திணைக்கள அதிகாரிகள் காலை 8 மணி முதல் அங்கு காத்து நிற்கின்றனர். இவர்கள் தாமதமாக செல்லும்போது அவர்கள் இவர்களை பொறுப்பேற்பதில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்னரும் நாம் அவ்வாறான பயணத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அது சாத்தியப்படவில்லை.

இம்முறை கொரியா வேலை வாய்ப்புக்காக செல்லும் 800 ஆவது குழு நாட்டிலிருந்து புறப்பட்டது. அது தொடர்பில் நாம் கொரிய நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். எனினும் இந்த விமான பயணங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

கொரியாவில் மீன்பிடித்துறை வேலை வாய்ப்புக்காக 50 பேர் நேற்று செல்ல இருந்தனர் எனினும் விமானம் தாமதம் காரணமாக அந்தப் பயணத்தை ரத்து செய்ய நேரிட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment