உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் வளி மாசடைவு இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் சிகிச்சை வைத்திய நிபுணர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வளி மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இது மனித ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்துவதில் முன்னணியில் உள்ளதாக தற்போது புதிய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், வளி மாசு இதய நோயை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், தரமற்ற வளியை சுவாசிக்கும்போது வளி மாசு நுரையீரல்கள் மற்றும் இதயம் வழியாக இரத்த ஓட்டத்தில் ஆழமாக செல்ல முடியும். இது இதயம் சுற்றோட்ட நோய்களை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வளி மாசுபாடு அதிகரித்து வருவதால், வளி மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது என்றும், மேலும், இதய நோயாளார்கள் வளி மாசுபாட்டினால் பாதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
மேலும், "வளி மாசடைவு இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் நோய்கள் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற பிற தொற்றாத நோய்களையும் பாதிக்கிறது
வளி மாசு என்பது வளி மாசடைதல் அல்லது காற்று மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும்.
உலக மக்கள் தொகையில் 99 சதவீத மக்கள் தரமற்ற வளியை சுவாசிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனவே, வீட்டில் உள்ள காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் சுத்தமான எரிபொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை விரிவுபடுத்துவது அவசியம். அவற்றில் சூரிய சக்தி மின்சாரம், உயிர் வாயு, திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி), இயற்கை எரிவாயு, அல்ககோல் எரிபொருள்கள் ஆகியவை இதில் அடங்கும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment