எந்தவித தராதரமும் பார்க்காமல் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : எதிர்க்கட்சித் தலைவர் கடைகளுக்கு செல்வதில்லையென தெரிகிறது - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 20, 2023

எந்தவித தராதரமும் பார்க்காமல் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : எதிர்க்கட்சித் தலைவர் கடைகளுக்கு செல்வதில்லையென தெரிகிறது - மஹிந்த அமரவீர

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்போம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகையில், 80 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்படும்போது அரிசி ஒரு கிலோ 200 ரூபா மற்றும் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், லுனுகம்வெஹெர பகுதியில் வீதிக்கு அருகில் 5 கிலோ அரிசி பொதிகள் கிலோ 125 -130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நீண்ட காலமாக கடைகளுக்கு செல்வதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

நாட்டில் பெருமளவு மக்கள் நாட்டரிசி மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றையே உணவுக்காக கொள்வனவு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கும் வகையில் அந்த அரிசி வகைகள் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

குறைந்த விலையில் அவற்றை சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும். வெகு தூரம் செல்ல முடியாவிட்டால் சதொச நிறுவனங்களில் அவற்றைக் கொள்வனவு செய்யலாம்.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கும் வகையில் நாட்டில் எங்கும் எம்.ஓ.பி உரம் தட்டுப்பாடு கிடையாது. அவ்வாறு காணப்பட்டால் உடனடியாக அவற்றை வழங்க முடியும்.

சில அதிகாரிகள் அரசாங்கத்தை அசெளகரியங்களுக்கு உள்ளாக்குவதற்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றன. அவர்கள் அந்த உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 40,000 ரூபாவுக்கு மேல் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்ட யூரியா உரம் தற்போது விவசாயிகளுக்கு 9,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று எம்.ஓ.பி உரமும் 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன என்றார்.

No comments:

Post a Comment