(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை முன்னெடுக்கும் செயன்முறை குறித்த தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பான சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. எனினும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த வாரம் தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு திடீரென அரசாங்கம் அதன் தீர்மானத்தை மாற்றுவதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய, இவ்வாறான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே பதில் நிதி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினை முன்னெடுப்பதற்கான செயன்முறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.
எதிர்வுகூறல்கள், முன்கூட்டிய ஊகங்கள் சந்தைத்துறையில் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உட்படுத்தலாம். எனவே, இந்த விடயத்தில் நாம் பொறுப்புடனும் விடாமுயற்சியுடனும் கருத்துக்களை வெளியிடுவது முக்கியமாகும்.
கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இவை நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு சாதகமான உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment