மக்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 28, 2023

மக்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் - ஜீவன் தொண்டமான்

அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட, அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரமுகர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் அமைச்சில் புதன்கி்ழமை (28) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பெயர்ப் பட்டியலை தயாரிக்கும்போது பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்ற கோரிக்கை எம்மால் முன்வைக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோருடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தி, தீர்வொன்றை பெற்றிருந்தோம்.

ஏனெனில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஈ.பி.எப், ஈ.டி.எப் பிடிபடுவதால் சமுர்த்தி கொடுப்பனவின்போது கடந்த காலங்களில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இம்முறை அந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டது.

அஸ்வெசும திட்டத்தில் புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளது எனக்கூறி தலவாக்கலையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என எண்ணத்தோன்றுகிறது. போலியான முறையில் தகவல்களும் பரப்பட்டு வருகின்றன. இதனை எம்மால் ஏற்க முடியாது.

அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஜுலை 10 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும். 'ஒன்லைன்' ஊடாகவும், பிரதேச செயலகங்களிலும் அதனை செய்யலாம்.

தமது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் மேன்முறையீட்டு உதவியை நாடலாம். தோட்டங்களில் இருந்து 52 வீதமானோர் இத்திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். பெயர் இல்லாவிட்டால் எமக்கு தெரியப்படுத்துங்கள். இல்லையேல் நீங்களாகவே மேன்முறையீடு செய்யலாம். நாமும் தகவல்களை திரட்டி வருகின்றோம்.

எனினும், இந்த சமூகநலத்திட்டத்தையும் அரசியல் மயமாக்கி, மக்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். இது ஏற்புடைய விடயம் அல்ல. தவறுகள் இடம்பெற்றிருந்தால் மக்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்." என்றார்.

No comments:

Post a Comment