(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கதைத்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படும்போது தமிழ் மக்கள் சட்டம், ஒழுங்கு மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள். பொருளாதார மீட்சிக்கு முன்னர் முதலில் சட்டவாட்சி கோட்பாட்டை அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற நிதி, பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார கொள்கைக்கு அமையவே வரிக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். வரி அறவிடல் ஊடாக சமூக நலனை பேண முடியாது என்பது தற்போது உண்மையாகியுள்ளது. சுகாதாரம், இலவசக் கல்வி ஆகிய சேவைத்துறைகளுக்கு வரி அத்தியாவசியமானது.
நாட்டில் உள்ள பிள்ளைகள் இலவசக் கல்வியின் உச்ச பயனை பெறுகிறார்கள் என்று அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது.
நாட்டில் இலவசக் கல்வி என்பது மிகுதியாகியுள்ளதா என்பது சந்தேகத்துக்குரியது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் 40 சதவீதம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
செலவுகளை வரையறுக்கும்போது இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவத்துக்கு அரசாங்கம் வழங்கும் நிலை கேள்விக்குரியது.
அரச பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் இல்லை தனியார் வகுப்புகள் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுகிறார்கள். தனியார் வகுப்புகளுக்காக பெற்றோர் பாரிய நிதியை செலவழிக்க வேண்டியுள்ளது. இதுவே உண்மை. முறையற்ற வள பற்றாக்குறையால் அரச பாடசாலை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கட்டம் கட்டமாக இலவசக் கல்வி என்பதில் இருந்து விலகுகிறது.
அறவிடப்படும் வரி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது சந்தேகத்துக்குரியது. வரிக் கொள்கை வகைப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை காணப்படுவதும் இல்லை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது பல்வேறு வழிமுறையில் வரி அறவிடப்படுகிறது.
வரிக் கொள்கையை சிறந்த முறையில் செயற்படுத்துவதுடன், சட்டத்தையும் சிறந்த முறையில் பொதுவான தன்டையுடன் செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படுபவர்களுக்கு ஒரு சட்டம், எதிராக செயற்படுபவர்களுக்கு பிறிதொரு சட்டம் செயற்படுத்தப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இருப்பினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் முற்றிலும் தவறானது.
தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தி என்ன. இன நல்லிணக்கம் தொடர்பில் ஒருபுறம் கதைத்து விட்டு பிறிதொரு புறம் தமிழ் பிரநிதிக்கு எதிராக செயற்படும்போது தமிழ் மக்கள் எவ்வாறு சட்டம், ஒழுங்கு மீது நம்பிக்கை கொள்ளுவார்கள். இது பாரதூரமான பிரச்சினை.
குற்றமிழைப்பவர்களை சமமாக நடத்த வேண்டும். பாராளுமன்றத்தில் இந்த வித்தியாசத்தை அவதானித்தோம். ஆளும் தரப்புக்கு ஒரு சலுகை எதிர்க்கட்சிக்கு பிறிதொரு சலுகை அரசாங்கம் மனம்போன போக்கில் செயற்படுகிறது. தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்பதால் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment