(எம்.ஆர்.எம்.வசீம்)
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து 109 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (25) கைது செய்யப்படுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக பணியகத்துக்கு 50 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை பல்வேறு நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து அவர்கள் 109 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன் பிரகாரம் பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டதுடன் அதன் பெறுபேறாக குருணாகலை பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிரதான சந்தேகநபர்கள் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்கள்.
குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் இதற்கு முன்னர் பணியகத்தின் அனுமதிப்பத்திரத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நபர்களை இணைத்துக் கொண்டுள்ளதுடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து இதற்கு முன்னரும் பண மோசடி செய்த காரணத்தினால் குறித்த முகவர் நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் பணியகத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே வெளிநாட்டு வேலை வாய்பபு பெற்றுத்தருவதாக தெரிவித்து சட்டத்துக்கு முரணான வகையில் தொடர்ந்தும் இந்த மோசடி நடவடிக்கையை செய்து வந்திருப்பது தகவல் வெளிப்பட்டிருக்கிறது.
பணியத்தின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிராேதமான முறையில் ஆட்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக இணைத்துக் காெள்ளல் மற்றும் பணம் மோசடி செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நேற்றுமுன்தினம் குருணாகலை நீதிவான நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்குமறியலில் வைக்குமாறு நீதிவான உத்தரவிட்டதாக பணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment