ஊடகத்துறையை முடக்கி நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது : தொழில் முயற்சியாளர்கள் முன்னேற நிவாரணம் வழங்க வேண்டும் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 7, 2023

ஊடகத்துறையை முடக்கி நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது : தொழில் முயற்சியாளர்கள் முன்னேற நிவாரணம் வழங்க வேண்டும் - இராதாகிருஸ்ணன்

(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஊடகத்துறையை முடக்கி நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை முறையற்றதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒரு நாட்டின் வளம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய துறைகளில் தங்கியுள்ளது. ஏற்றுமதியை வளப்படுத்த வேண்டுமாயின் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தேசிய உற்பத்திகள் மேம்படுத்தப்பட வேண்டுமாயின் தேசிய மட்டத்திலான தொழில் துறையினர் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை மேம்படுத்தினால் மாத்திரமே சாதகமான அபிவிருத்தி அம்சங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பொருளாதார பாதிப்பின் பின்னரான காலப்பகுதியில் தேசிய தொழில் துறை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

தேயிலை, இறப்பர் என்பன பிரதான ஏற்றுமதியாக காணப்படுகின்ற நிலையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முயற்சியாளர்கள் வங்கி கடன், மின்சார கட்டணம் அதிகரிப்பு, சேவை கட்டணம் அதிகரிப்பு ஆகிய நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறம் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் கட்டிட அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலர் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார பாதிப்பால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே தொழில் முயற்சியாளர்கள் தொழில் துறை ரீதியில் முன்னேற்றமடைய அரசாங்கம் ஒத்துழைப்பு அல்லது நிவாரணம் வழங்க வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஊடகத்துறையை முடக்கும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. ஊடகத்தை முடக்கி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது.

ஊடகங்கள் ஊடாகவே ஊழல்வாதிகள் வெளி வருகிறார்கள். ஆகவே ஊடகத்துக்கு எதிரான செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமைக்காக காரணம் குறித்து நிலைப்பாட்டை குறிப்பிட முடியாது. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாக விளங்குகிறது என்றார்.

No comments:

Post a Comment