(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டின் தேசிய உற்பத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கடசித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்டைபெற்ற சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் பட்சத்தில், நாட்டில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கான உதாரணங்களைக் காண முடியும்.
பொருளாதார நெருக்கடி, அதிக வட்டி விகிதங்கள், லீஸிங் மாபியா, மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி, அரசின் வரிக் கொள்கை போன்றவற்றால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழில் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகளை வழங்க முடிந்தால் உலக உற்பத்தியில் முதலிடத்தில் எமது நாட்டை ஸ்தானப்படுத்த முடியும்.
மேலும் நாட்டின் தொழிலாளர்களில் 45 வீதமானவர்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்களாகும். அதேபோன்று ஏற்றுமதி அபிலிருத்தி சபையின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு 52 வீத பங்களிப்பை வழங்குவது சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளாகும்.
கிராமிய அவிருத்திக்கு பெரும் சக்தியாக இருப்பதுடன் உள்நாட்டு தொழிற்சாலை வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
அத்துடன் உலகின் பல நாடுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு சிறப்பு கவனம் செலுத்தியிருக்கின்றன. எமது நாட்டில் அத்தகைய கவனம் செலுத்தப்படவில்லை என்பது துர்ப்பாக்கிய நிலை.
நாட்டின் பொருளாதாரத்தின் எஞ்ஜின் என்று அழைக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் மீது அரசாங்கம் இப்போதாவது கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment