(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், கைத்தொழில் துறையினர் பெற்றுக் கொண்டுள்ள வங்கிக் கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வீழ்ச்சியடைந்துள்ள தொழில் துறையை மேம்படுத்த முடியாது. பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்க அவசர சட்டம் ஊடாக நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்களை அரசாங்கம் இயற்ற வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, பொருளாதார பாதிப்பின் காரணமாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உட்பட கைத்தொழில் துறையினர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொள்கைத் திட்டங்களினாள் தொழிற்துறையினர் பலர் தற்கொலை செய்துள்ளார்கள். பலர் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், கைத்தொழில் துறையினரின் முறையற்ற தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடையவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொழிற்றுறை ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளார்கள்.
பணவீக்கம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக் கடன்களின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதி கட்டமைப்பு, உற்பத்தி பற்றாக்குறை, அரச கொள்கை பலவீனம், பூகோள காரணிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் வங்கிகளில் பெற்றுக் கொண்ட வங்கிக் கடன்களை மீளச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் தொழில் துறையினரின் 4000 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
பல பில்லியன் ரூபா வங்கிக் கடன்களை பெற்றுக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் உரிய காலத்தில் நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள நிலையில் பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரின் சொத்துக்களை அரசுடமையாக்குவது முறையற்றது.
ஆகவே உரிய காரணிகளினால் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ள தரப்பினரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.
அத்துடன் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், கைத்தொழிற்துறையினர் பெற்றுக் கொண்டுள்ள வங்கிக் கடன்களை மறுசீரமைப்பதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வீழ்ச்சியடைந்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மேம்படுத்த முடியாது. ஆகவே புதிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தங்களின் தேவைகளுக்காக நாட்டின் அரசியலமைப்பை ஒரு சில நாட்களுக்குள் மாற்றியமைத்தார்கள்.
அதுபோல் அவசர சட்டம் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment