மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான பேத்தை இன மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழக்கிழமை மாங்காடு பகுதியிலுள்ள கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய குறித்த மீன்களை உட்கொள்ளக் கூடாத மீனினம் என்பதைத் அறிந்து மீனவர்கள் அதனை எடுத்து வீசியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஒரு குடும்பத்தினர் இவ்வாறு மீனவர்கள் வீசிய மீன்களை பொறுக்கி எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம், என குறித்த மீனவர்கள் தெரிவித்ததையும் அவர்கள் பொருட்படுத்தாது அந்த மீனினத்தை அவர்கள் எடுத்துச் சென்று அன்றையதினம் மதிய உணவிற்காகச் சமைத்து உண்டுள்ளனர்.
உணவு உட்கொண்ட அன்றைய மாலை வேளையிலேயே 4 பேரும் திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அன்றையதினம் மாலை வேளையிலேயே 27 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார்.
எனினும் மேலும் மூவர் அதே வைத்தியிசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய யூலியாமலர் எனும் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய பெண்ணும் மற்றும் மூன்றரை வயதுடைய ஆண் பிள்ளையும் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment