எந்தத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயார் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 20, 2023

எந்தத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயார் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்தினால் மக்களுடன் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதனால் அரசாங்கம் எந்தத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு முகம்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதனால் முடியுமானால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயிர்ச் செய்கைகளுக்கு இரசாயன உரங்களை பயன்படுத்துவதை தடை செய்து, சேதன உரங்களை மட்டுமே இட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவால், விளைச்சல் அழிந்து, விவசாயிகள் உட்பட ஒட்டு மொத்த மக்களும் நிர்க்கதிக்குள்ளாகினர்.

அத்துடன் இரசாயன உரங்கள் மற்றும் நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டமையால், நாட்டின் நிதி வளம் பயனற்ற செயல்களுக்குச் செலவிடப்பட்டது. இதனால் இந்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு பாரியதாகும்.

இதுபோன்ற தவறான முடிவுகளால் ஒட்டு மொத்த மக்களையும் பாதிப்புக்குட்படுத்த காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இதனால் இந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை ஈடுகட்டத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் நாளுக்குநாள் தாமதப்படுத்தி வருகிறது.

தற்போது விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்கவில்லை. சந்தையில் அரிசியின் விலை 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடமிருந்து 80 ரூபாவுக்கே நெல் கொள்வனவு செய்யப்படுகிறது. நெல்லுக்கான நியாயமான விலை குறித்து அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது, சபையில் இருந்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில், லுனுகம்வெகர பிரதேசத்தில் 125 ரூபாவுக்கு அரிசி விற்வனை செய்யப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் நீண்டகாலமாக கடைக்கு சென்று இது தொடர்பில் கவனிக்காமல் இருந்து வந்திருக்கிறார் என்றார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதில் அளிக்கையில், நாங்கள் மக்களுடன் இருப்பதால் மக்களின் பிரச்சினைகள் எங்களுக்கு தெரியும். தேர்தல் ஒன்றை நடத்தினால் யார் மக்களுடன் இருக்கின்றார்கள் என்பதை மக்கள் தீர்ப்பளிப்பார்கள். அதனால் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எந்தத் தேர்தலை வேண்டுமானாலும் முடியுமானால் நடத்தட்டும். நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment