(நா.தனுஜா)
இலங்கை தற்போது நிலைபேறான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடுகின்ற மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்ளும் அதேவேளை, சமூக மற்றும் சூழலியல் சவால்களை உரியவாறு கையாள்வதற்கான வாய்ப்பை நிலையான நிதியியல் நிலைவரமும், தனியார் முதலீடுகளுமே வழங்கும் என்றும் அச்செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
'நிதியியல் கட்டமைப்புக்குள் நிலையான கொள்கைகளை உள்வாங்குவதன் மூலமும், தனியார் முதலீடுகளை ஈர்த்துக் கொள்வதன் ஊடாகவும் இலங்கையால் பரந்துபட்ட முதலீடுகளுக்கான வாய்ப்பை உருவாக்கவும், சர்வதேச மூலதனத்தை உள்ளீர்த்துக் கொள்ளவும், மீண்டெழக் கூடியதும் அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் முடியும்' என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நிலைபேறான அபிவிருத்திப் பேரவை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டத்தினால் தயாரிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான முதலீட்டு வரைபடமானது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு, உணவு மற்றும் குடிபானம், பொருள் உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய துறைகளில் காணப்படுகின்ற 15 முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளப்படுத்தியுள்ளது.
அவ்வரைபடம் இலங்கை அதன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதை இலகுபடுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அவ்வரைபடத்திலேயே ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டம் மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா, 'எந்தவொரு முதலீட்டின் ஊடாகவும் நாட்டுக்குள் வள உட்பாய்ச்சல் இடம்பெறும். இருப்பினும் அம்முதலீடுகள் இலங்கையின் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான வளர்ச்சியை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் பிணைந்தவையாகக் காணப்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். கண்ணியத்துடனான வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தரமான முதலீடுகள் இலங்கையில் இடம்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment