கனடாவிற்கு மாணவர் விசா : பண மோசடி செய்த 6 பேர் கைது : கணனிகள், கடவுச்சீட்டுகள், பணம் உள்ளிட்டவை மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 27, 2023

கனடாவிற்கு மாணவர் விசா : பண மோசடி செய்த 6 பேர் கைது : கணனிகள், கடவுச்சீட்டுகள், பணம் உள்ளிட்டவை மீட்பு

(எம்.வை.எம்.சியாம்)

கனடாவிற்கு மாணவர் விசா வழங்குவதாகக்கூறி பண மோசடி செய்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு நிதி குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் கடவத்தையில் விசா நடைமுறைக்கு போலி ஆவணங்களை வழங்கும் வர்த்தகத்தை மேற்கொண்டு வந்த கட்டிடமொன்றை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது 3 கணனிகள், 3 மடிக்கணினிகள், 4 அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர் இயந்திரம், பல நிதி அறிக்கைகள், கடவுச்சீட்டுகள், போலி ஆவணங்கள், உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 1,187,130 ரூபா பணம் என பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும், வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடைய ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

வெளிநாட்டு விசாக்களை நாடும் நபர்களுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் சொத்து தொடர்பிலான அறிக்கைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை இந்தக் குழுவினர் உருவாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கொழும்பு நிதி குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment