அரச சேவையிலுள்ள விசேட மருத்துவர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
அரச சேவையிலுள்ள விசேட மருத்துவர்களின் சேவைக் காலத்தை கண்டிப்பாக 60 வயதென தீர்மானித்து அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, 176 மருத்துவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்திடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்கார் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில், நேற்றையதினம் மேற்படி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கும்போது, அரச சேவையிலுள்ள விசேட மருத்துவர்களின் சேவைக் கால வயதை 63 வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை பெற்றுக் கொள்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விடயம் மகஜர் ஒன்றின் மூலம் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இவ்விடயம் தொடர்பில், தாம், பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக மனுதாரர் சார்பில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னர் 60 வயது நிறைவுறும் விசேட மருத்துவர்கள் உள்ளதால், இந்த மனு தொடர்பிலான அவதானத்தை விரைவில் முன்னெடுப்பது அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் மேற்படி தீர்மானம் தொடர்பில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அதற்கிணங்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம் மேற்படி மனு தொடர்பில் அடுத்தகட்ட விசாரணையை இன்று மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment