இலஞ்சம் கொடுத்து ஏறாவூர் பொலிஸ் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக தெரிய வருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை (21) ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் தரித்து நிற்பதாகவும், அப்புகையிரத தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன்படி, முன்னதாக வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே காணப்பட்ட முன்விரோத மோதல் இடம்பெற்றுள்ளது.
ஐயங்கேணி பகுதியில் இருந்து வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்த குழுவினர், வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவினரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினரிலும் சிலர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், ஐயங்கேணி பகுதியில் இருந்து வந்தாறுமூலை பகுதிக்கு தாக்குதலுக்காக வந்த குழுவினர் தப்பிச் சென்றபோது, அவர்கள் மோட்டார் சைக்கிளொன்றை அவ்விடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த மோட்டார் சைக்கிள் வந்தாறுமூலை இளைஞர் குழுவினால் புகையிரத தண்டவாளத்தில் வைத்து எரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, மோட்டார் சைக்கிளை தீ வைத்தமை மற்றும் தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஏறாவூர் நீதிமன்றத்தில் அன்றையதினமே ஆஜர்ப்படுத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது வாள் வெட்டு தாக்குதல் நடத்திய ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிப்பதற்காக அவரது 45 வயதுடைய தாயும், 23 வயதுடைய மற்றுமொரு நபரும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இச்சம்பவம் தொடர்பில் செயலாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜாவுக்கு இலஞ்சமாக வழங்கி, அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், சந்தேகநபரின் தாயும் மற்றைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலஞ்சம் வழங்கிய காரணத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment