(எம்.ஆர்.எம்.வசீ்ம்.இராஜதுரை ஹஷான்)
மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளோம். அத்துடன் மாணவர்களுக்காக கல்வியமைச்சு வழங்கும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் தொழில்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் மீளச் செலுத்தும் அடிப்படையில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் 15,000 ரூபா கடனையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக புதிய மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இஸட்கோருக்கு அமைய விடய தானங்களுக்கு ஏற்ப திறமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
என்றாலும் சிலர் மேன்முறையீடு செய்துள்ளனர். அதனால்தான் சற்று தாமதம் ஏற்படுகிறது. எனினும் எதிர்வரும் மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும்.
அது மட்டுமன்றி அவர்களுக்கு கல்வி அமைச்சினால் தற்போது மாதாந்தம் 5ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலதிகமாக அவர்களின் உணவு தேவைக்காக வங்கிகள் ஊடாக 15,000 ரூபா வரை கடன் வழங்கப்படுகிறது. அவர்கள் கல்வியை முடித்துக் கொண்டு தொழிலுக்குச் செல்லும்போது அதனை மீளச் செலுத்தும் அடிப்படையிலேயே அது வழங்கப்படுகிறது.
மேலும், ஆசிரியர் கல்விச் சேவையில் 60 வீதமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது கடந்த மூன்று வருடங்களாக நிலவும் பிரச்சினையாகும். எனினும் கடந்த வாரத்தில் அதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான பெறுபேறுகளும் வெளியிடப்படவுள்ளன.
No comments:
Post a Comment