'நீங்கள் வாய் மூடி உட்காருங்கள்' என்ற வகையிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, March 6, 2023

'நீங்கள் வாய் மூடி உட்காருங்கள்' என்ற வகையிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கும்போது 'வாய் மூடி உட்காருங்கள்' என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு, 'நீங்கள் வாய் மூடி உட்காருங்கள். தேர்தலுக்கு பணத்தை வழங்குங்கள்' என்ற வகையிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (4) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு அரசாங்கம் பல்வேறு உபாயங்களை கையாண்டு வந்தது. இறுதியாக, தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்திருந்தது.

தேர்தலை நடத்துமாறும் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்குமாறும் நாங்கள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

தேர்தலை நடத்துமாறு மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கும்போது, அதனை கண்டுகொள்ளாமல், 'வாய் மூடி அமர்ந்து கொள்ளுங்கள்' என ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தி வந்தார்.

ஆனால், தேர்தலை நடத்துவதற்கு பணம் விடுக்காமல் இருக்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குக்கு நீதிமன்றம் சிறந்த தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய் மூடி அமருமாறு அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு, 'நீங்கள் வாய் மூடி அமருங்கள்; தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்குங்கள்' என்ற வகையிலேயே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அதனால் இனிமேலும் தேர்தலை ஒத்திவைக்க இந்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையும் இல்லை.

மேலும், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு சிலர் மௌனம் காத்துவந்த வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டின் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின் சார்பாக நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றின் இத்தீர்ப்பினால் இந்நாட்டு மக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ச்சியாக நம்பிக்கை வைத்த ஒரே அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதனை பெற்றுக் கொள்ள மேற்கொள்ள முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

என்றாலும், ஜனாதிபதியும் அரசாங்கமும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் வேறு உபாயங்களை தீட்டிக் கொண்டு இந்த தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இல்லாவிட்டால், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள முன் நிற்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் பெறுபேறுக்கு பின்னர் நிச்சயமாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டி ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதனை தடுப்பதற்கே இந்த தேர்தலை ஒரு வருடத்துக்காவது பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் ஆணையுடன் வெற்றி பெற்று, நாட்டில் ஆட்சியமைப்போம். வங்குரோத்தாகி வீழ்ச்சியடைந்திருக்கும் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய இயலுமை கொண்ட குழு ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment