தேர்தல் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது - சானக வகும்பர - News View

About Us

About Us

Breaking

Saturday, March 11, 2023

தேர்தல் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது - சானக வகும்பர

(எம்.ஆர்.எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது. அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் அவர்கள் தீர்மானங்களை அறிவிக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றாலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்துதான் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தற்போது கருத்துரைக்கும் எதிர்தரப்பினர்தான் 2018 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு துணைசென்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த தேர்தலையும் பிற்போடவில்லை, தேர்தலில் தோல்வியடையும் சூழல் காணப்பட்ட போதும் அவர் தேர்தலை நடத்தி மக்களாணைக்கு மதிப்பளித்தார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை எதிர்த்தரப்பினர் சவாலுக்கு உட்படுத்துகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல அவர் பாராளுமன்றத்தின் 134 உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஆகவே அவர் எவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்த முடியும் என குறிப்பிடுகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து டி.பி. விஜேதுங்க பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், அவர் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பயன்படுத்தி யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார், ஆகவே ஜனாதிபதி பதவி விவகாரத்தில் மக்களால் தெரிவு, பாராளுமன்ற தெரிவு என வேறுபாடுகள் கிடையாது என்றார்.

No comments:

Post a Comment