நிறைவேற்றுத்துறை பிற்போட விரும்பினால் சபைக்கு வந்து எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என கூற முடியும் - ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 11, 2023

நிறைவேற்றுத்துறை பிற்போட விரும்பினால் சபைக்கு வந்து எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என கூற முடியும் - ரவூப் ஹக்கீம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. உறுப்பினர் பிரேமனாத் சிங் தொலவத்தவின் சிறப்புரிமை பிரச்சினை நீதிபதியின் நடத்தையை கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. இது முற்றுமுழுதாக நிலையியற் கட்டளையை மீறி இருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்க்கையில், உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஆளும் கட்சி உறுப்பினர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்திருந்தார்.

பாராளுமன்ற சிறப்புரிமை என்ற உரிமையை பயன்படுத்திக் கொண்டு அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. உறுப்பினர் பிரேமனாத் சிங் தொலவத்தவினால் சபைக்கு முன்வைக்கப்பட்டிருந்த சிறப்புரிமை பிரச்சினை நீதித்துறை மீது அழுத்தத்தை பிரயோகிப்பதாக அமைகின்றது. குறிப்பிட்ட நீதித்துறை நீதிபதிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் நிறைவேற்றுத்துறை தேர்தலை பிற்போடுவதற்கு விரும்பினால், இந்த சபைக்கு வந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் எந்தத் தேர்தலும் நடத்தப்படாது என கூற முடியும். ஆனால் எங்களுக்கு சொந்தமான உரிமைகள் இருக்கின்றன.

மற்றுமொரு உறுப்பினர் சிறப்புரிமை உரிமையை எழுப்பும்போது நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக உள்ளது. அதனால் இந்த சபையின் செயற்பாட்டை அவர்களின் சொந்த நோக்கத்துக்காக யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

அத்துடன் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற பேரில் நிதிபதியின் நடத்தை கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. இது முற்றுமுழுதுமாக நிலையியற் கட்டளையை மீறி இருக்கிறது. அப்படியானால் தனி நபர் பிரேரணை கொண்டுவந்திருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment