புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்புப் பிரசாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்," என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், "திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னைக் கைது செய்யவும். பொய் வழக்குகளைப் போட்டு ஜனநாயகக் குரல்வளையை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாகச் சொல்கிறேன். 24 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறேன். முடிந்தால் என் மீது கை வையுங்கள்," என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசக்கூடிய வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் தவறான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள், பொலிஸார் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தொழிலாளர்கள் அச்சத்தில் இருப்பதால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முயல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், பொலிஸார் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு ஆளும் திமுக அரசுதான் பொறுப்பு என்று நேற்று அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு என்னும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரசாரம், தற்போது ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது," என்று குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில், சேவைத்துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் வட மாநில தொழிலாளர்களின் பெரும் பங்கை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.
வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் வெறுப்புப் பிரசாரத்தையும் தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை. வட இந்திய சகோதர, சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்," எனத் தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கையில், "இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாசாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.
திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து, தற்போது வரை ஏதோவொரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுகள் எத்தனை?" என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
அதோடு, "திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் வெறுப்புப் பிரசாரத்தின் காரணமாகத் தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக்கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வட மாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரசாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு," என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, வட மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, 153, 153A(1)(a), 505(1)(b) IPC, 505(1)(c) IPC ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்குப் பதிவு குறித்து ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, நான் அறிக்கையில் கூறிய விஷயங்களை காணொளியாகவும் வெளியிடுகிறேன் என்று கூறி வட இந்தியர்கள் குறித்து மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், கே.என்.நேரு ஆகியோர் பேசிய ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment