அரசாங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக மாற்றுவதற்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயற்படுமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் போன்று, அமைச்சர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், இவ்வாறு செய்வது, அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னேற்ற உதவும் என்றும் தெரிவித்தார்.
2023 புத்தாண்டில் இன்று (02) காலை சுற்றாடல் அமைச்சில் ஊழியர்களுடன் இணைந்து சத்தியப்பிரமாணம் செய்து தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அமைச்சர் நசீர் அஹமட் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், அமைச்சுக்களின் செயற்பாடுகளை வினைத்திறனுள்ளதாக்குவதற்கு இலக்குகளை நிர்ணயித்துச் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காலாண்டுக்குள் சாதிக்கப்பட்டவற்றை மதிப்பீடு செய்வதற்கு இவை உதவும். இந்த மதிப்பீடுகள் செயற்பாடுகளின் மந்த கதியையோ அல்லது முன்னேற்றத்தையோ அளவிட உதவும். எனவே, இதேபோன்று, அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தப்படுவது அவசியம்.
இது தவிர, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் அடையவுள்ள இலக்குகள் மற்றும் சாதனைகளை நிர்ணயித்துச் செயற்படுவது அவசியம்.
நாடு தற்போது பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள நிலையில், நோக்குகளை நிர்ணயித்துச் செயற்படுவதே சிறந்தது.
அரசாங்கத்தின் சாதனைகளை அடைந்து கொள்வதற்கான செயற்பாடுகள் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
2023 பட்ஜட் இலக்குகளை வெற்றி கொள்ள இதுவே வழிகோலும். பொதுமக்களின் ஒத்துழைப்புக்களும் இதற்கு அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment