தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தொடர்பில் விசேட சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 2, 2023

தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தொடர்பில் விசேட சந்திப்பு

(இராஜதுரை ஹஷான்)

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், சட்டமா அதிபருக்கும் இடையில் திங்கட்கிழமை (02) இடம்பெறும் விசேட சந்திப்பை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வியாழக்கிழமை (05) வெளியிடப்படும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்டமா அதிபருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை (05) திகதி வெளியிடுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் திகதி அறிவிக்கப்பட்டு 14 அல்லது 17 நாட்களுக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு 5 முதல் 7 வார காலத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

இதற்கமைய உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 11ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை மற்றும் நகர சபை தேர்தல் சட்டத்திற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதிக்குள் 340 உள்ளூராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கு நிதி சிக்கல் ஏதும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவுகள் மதிப்பிடப்பட்டு அதற்கான நிதி 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே தேர்தலை நடத்த நிதி நெருக்கடி உள்ளது என திறைசேரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அடிப்படையில் போட்டியிட பிரதான எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேர்தல் தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தாத நிலையில் உள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரு ரிட் மனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment