(எம்.ஆர்.எம்.வசீம்)
புகையிரத சேவை மட்டுத்தப்பட்டமைக்கு அரசாங்கத்தை குறைகூறுவதில் பயனில்லை. புகையிரத திணைக்கள பொது முகாமையாளரே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக புகையிரத சேவை மட்டுப்படுத்தட்ட அளவிலேயே மேற்கொள்ள முடியும் என புகையிரத சேவை பிரிவு அறிவித்திருந்தது.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் பிரகாரம் புகையிரத திணைக்களத்தில் பலர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர். இதன் காரணமாக புகையிரத சேவையின் ஒருநாளைக்கு மேற்கொள்ளப்படும் ரயில் பயணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அரசாங்கம் தீர்மானிக்கும்போது, அரச நிறுவனங்கள் திணைக்களங்களில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை, அவர்கள் இதுவரை செய்து வந்த பணி, அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றால் அந்த சேவையை மேற்கொள்ள மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குறித்த திணைக்களத்தில் பொது முகாமையாளருக்கே இருக்கின்றது.
புகையிரத திணைக்களத்தின் ரயில் சாரதிகள் இத்தனை பேர் ஓய்வு பெற்றுச் செல்வது பொது முகாமையாளருக்கு தெரியாதா? அவர்கள் அந்த சேவைக்கு தற்போது கட்டாயம் தேவை என்றிருந்தால், அது தொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி, அவர்களின் சேவைக் காலத்தை குறிப்பிட்டதொரு காலத்துக்கு நீடித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், இறுதி நேரத்தில், ஊழியர் இல்லாமையால் ரயில் பயணம் மட்டுப்படுத்தபட்டுள்ளதாக தெரிவித்திருப்பதால் பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகி இருப்பதுடன் அரசாங்கமும் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படுகின்றது.
அதனால் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டதால் பயணிகள் எதிர்கொண்டுள்ள சிரமத்துக்கு புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரே பொறுப்புக்கூற வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு குறை கூறுவதில் பயனில்லை என்றார்.
No comments:
Post a Comment