பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரம் : ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த ஒருவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 1, 2023

பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரம் : ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்த ஒருவர்

(எம்.எப்.எம்.பஸீர்)

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இருவர் மற்றும் 9 பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் ஓய்வு பெறும் நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் வெற்றிடமாகியுள்ளன. இதனால் பொலிஸ் திணைக்களத்துக்குள் பதவிப் போட்டி தீவிரமடைந்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியாக கருதப்படும் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய நந்தன முனசிங்க மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியூ.எப்.யூ. பெர்ணான்டோ ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றனர்.

அத்துடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகஸ்டஸ் பெரேரா, வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன அழகக்கோன், வடக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜித்த குணரத்ன, சமூக பொலிஸ் மற்றும் காப்புறுதிப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்கார, கேகாலை பிரதிப் பொலிஸ்மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, பதுளை பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலால் அபோன்சு, களுத்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.டி.எஸ்.சி. சந்தநாயக்க, நுவரெலியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.எஸ்.என். பீரிஸ், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரஷாந்த ஜயகொடி ஆகியோர் 2022ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களாவர்.

இவ்வாறான நிலையில், இதனை மையப்படுத்தி கடந்த வாரம் (30) பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விஷேட பிரியாவிடை வைபவம் ஒன்று நடந்தது.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்னும் மூன்று மாதங்களில் தான் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனக்கு பதவி நீடிப்பு கிடைக்குமா என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் தனது ஜாதகத்துடன் சாஸ்திரக்காரர்களை சந்தித்துள்ளமை தொடர்பிலும் அவர் இதன்போது சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பதவி தானாக வர வேண்டும் எனவும் அரசியல், சிபாரிசுகளின் ஊடாக அதனை அடையக்கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, தற்போது வெற்றிடமாகியுள்ள பொலிஸ் திணைக்களத்தின் 2ஆவது உயர் பதவியான பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பாக, சிரேஷ்டத்துவத்தில் முன்னணியில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு அடுத்த நிலையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இம்மூவரில் ஒருவர் பொலிஸ் நிர்வாக பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவர் என தெரிகின்றது.

No comments:

Post a Comment