இந்தியாவுக்கு தப்பிச் சென்ற கஞ்சிப்பானை இம்ரான் : அவரது சட்டத்தரணி தெரிவிப்பது என்ன ? - News View

About Us

About Us

Breaking

Sunday, January 1, 2023

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற கஞ்சிப்பானை இம்ரான் : அவரது சட்டத்தரணி தெரிவிப்பது என்ன ?

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல பாதாள உலகத் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மர் இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள், அந்நாட்டு பொலிஸ் தகவல்களை மையப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கஞ்சிப்பானை இம்ரான் நாட்டிலிருந்து தப்பிச் சென்று தற்போது இந்தியாவில் இருப்பதை 'வீரகேசரி' சுயாதீனமாக உறுதி செய்தது.

பிணை நிபந்தனைகளை கடந்த 2022 டிசம்பர் 20ஆம் திகதி பூர்த்தி செய்த பின்னர், சில நாட்களில் அவர் இவ்வாறு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த டிசம்பர் 25ஆம் திகதி கஞ்சிப்பானை இம்ரான் தமிழ் நாடு ராமநாதபுரம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவினர் தமிழ் நாட்டு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள நிலையில், அதனை மையப்படுத்தி குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

எனினும் இம்ரான் இந்தியாவுக்கு சென்றுள்ளதை அவரது சட்டத்தரணி வீரகேசரியிடம் உறுதி செய்தார்.

'இம்ரானுக்கு எதிராக ஊடகங்கள் பல பொய்யான தகவல்கலை வெளியிடுகின்றன. அவருக்கு எதிராக போதைப் பொருள் தொடர்பில் ஒரு வழக்குக்கூட இல்லை. கொலை, கொலை முயற்சி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் அவர் பிணையில் இருக்கின்றார்.

அவர் இந்தியாவுக்கு சென்றமை தொடர்பில் எம்மால் எதுவும் செய்ய முடியாது. அது எனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் பட்டது. பிணையில் இருக்கும் அவர் இந்தியாவுக்கு செல்வதை அரசே தடுத்திருக்க வேண்டும்' என கஞ்சிப்பானை இம்ரானின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 20ஆம் திகதி கஞ்சிப்பானை இம்ரான் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் கொலை முயற்சி மற்றும் கொலைகள் குறித்த சந்தேகத்தில் தொடரப்பட்டிருந்த அந்த வழகிகில் அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

அதன்படி டிசம்பர் 20ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளால் கஞ்சிப்பானை இம்ரான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில், பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்தார்.

2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்ட அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனைவிட, வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தின் வலய சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை தொலைபேசியில் தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணையளித்துள்ளது.

குறித்த வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டிருந்த நிலையில், சட்டமா அதிபர் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப் பெற்று தண்டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் வழக்கை முன் கொண்டு செல்ல ஆலோசனையளித்திருந்தார்.

இதனையடுத்தே கஞ்சிப்பானை இம்ரான் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை ஏற்று கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க பிணையளித்துள்ளார்.

எனினும் அப்பிணை நிபந்தனைகள் டிசம்பர் 20ஆம் திகதி பூர்த்தி செய்யப்பட்டன. அதன்படி, கஞ்சிபானை இம்ரான் அவ்வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்ப்ட்டுள்ளார். அவ்வழக்கிலும் அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் கஞ்சிபானை இம்ரான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா மன்றில் ஆஜரானார்.

இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை இருக்கும் நிலையிலேயே அவர் இந்தியவுக்கு தப்பிச் சென்ருள்ளார். அவருக்கு நாட்டில் இருக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர் இந்தியாவுக்கு சென்றதாக கஞ்சிபானை இம்ரானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 25ஆம் திகதி, பிணை நிபந்தனை பிரகாரம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் கஞ்சிபானை இம்ரான் கையெழுத்திட்டாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றுக்கு அறிவிக்கவும், தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட நிலையில் சி.ஐ.டி. விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி போலி கடவுச் சீட்டிலேயே டுபாய் சென்றுள்ளார்.

போலி கடவுச் சீட்டு தொடர்பில் சி.ஐ.டி. தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே ஏனைய கொலை, கொலை முயற்சிகள் தொடர்பில் அவர் சி.சி.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.

2015 இல் டுபாய் சென்றுள்ள கஞ்சிபானை இம்ரான், 2016 ஜனவரி 26ஆம் திகதி அங்கு வதிவிட வீசாவைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், 27 சம்பவங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் தற்போது அனைத்து வழக்குகளிலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment