(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக இதுவரையில் 27 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இவ்வாண்டு புதிய ஆட்சி அமைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டிலுள்ள முன்னணி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து கூட்டணியமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். மக்களின் உண்மையான நிலைப்பாடுகளுக்கமைய ஆட்சியமைக்கப்பட வேண்டும். அதற்கு இவ்வருடத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நாட்டில் கிளர்ச்சிகள் ஏற்பட்டதன் பின்னர் சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் செலவுகள் ஏற்படும் என்று தேர்தல் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. அந்த நிதி இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி இல்லை என்பதை அரசாங்கம் காரணமாகக் கூற முடியாது.
சுதந்திர கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தில் இணைந்தவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சுதந்திர கட்சியின் கொள்கையைப் பின்பற்றாதவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். இவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.
எவ்வாறிருப்பினும் இவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை துறந்து, மீண்டும் எம்முடன் இணைய விரும்பினால் அதனை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம்.
முற்போக்கான கூட்டணியொன்றை அமைப்பதற்காக இதுவரையில் 27 அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்தலில் சிறந்த வெற்றிகளை பதிவு செய்வோம் என்றார்.
No comments:
Post a Comment