இனிவரும் நாட்களில் புகையிரத சேவை தாமதமடையும் : பொதுப் பயணிகள் கடும் விசனம் : அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் தொழிற்சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 3, 2023

இனிவரும் நாட்களில் புகையிரத சேவை தாமதமடையும் : பொதுப் பயணிகள் கடும் விசனம் : அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் தொழிற்சங்கங்கள்

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையில் 500 கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட சேவையாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து சேவையாளர் பற்றாக்குறையால் புகையிரத சேவை பாரிய நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.

சேவையாளர் பற்றாக்குறையால் கடந்த 31 ஆம் திகதி முதல் திங்கட்கிழமை (2) வரை நூற்றுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் பொருள் விநியோக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இனிவரும் நாட்களில் புகையிரத சேவை வழமைக்கு மாறாக தாமதமடையும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.

ஓய்வு பெற்ற புகையிரத சேவையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புகையிரத தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையாளர்கள் அனைவரும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயது தொடர்பில் அரச சேவையாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அரச சேவைக்கு புதிய நியமனங்கள் வழங்குவது மூன்று வருட காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லாத வகையில் அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக நிர்ணயிப்பது அரச சேவை கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அரச சேவையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இருப்பினும் அரசாங்கம் இவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.

புகையிரத சேவையாளர்கள் ஓய்வு - புகையிரத சேவை நெருக்கடி
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய 30,000 அரச சேவையாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்கள். இவர்களில் 500 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட புகையிரத சேவையார்கள் உள்ளடங்குகிறார்கள்.

புகையிரத சேவையாளர்கள் ஓய்வு பெற்றதால் புகையிரத சேவையில் ஆளணி பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த மாதம் 31 ஆம் திகதி 48 பயணிகள் புகையிரத சேவைகளும், 11 பொருள் விநியோக சேவைகள் உள்ளடங்களாக 59 புகையிரத சேவைகளும், 2023 ஆம் ஆண்டு முதலாம் திகதி 24 பயணிகள் புகையிரத சேவைகளும், 12 பொருள் விநியோக சேவைகளும் உள்ளடங்களாக 36 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன. நேற்று காலை முதல் பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

புகையிரத திணைக்களம்
புகையிரத சேவையில் இருந்து ஒரே தடவையில் 500 சேவையாளர்கள் ஓய்வு பெற்றதால் புகையிரத சேவை பாரிய அசௌகரியங்களை தற்போது எதிர்கொண்டுள்ளது. சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ள போதும், அதற்கு சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.

தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடும்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவு ஊதியம் மாத்திரம் கிடைக்கப் பெறும். ஆகவே ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைவது சாத்தியமற்றது என அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

புகையிரத சேவையில் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது என்பதை 2020 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்டு வருகிறோம். பொருளாதார நெருக்கடியால் புதிய நியமனம் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு புகையிரத சாரதி ஒரு நாளைக்கு இரு தடவை புகையிரதம் இயக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் தற்போது ஒரு நாளைக்கு 6 முறை புகையிரதத்தை இயக்கும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.

புகையிரத சாரதி ஒருவருக்கு அச்சேவைக்கு குறைந்தபட்சம் 3 வருட காலம் பயிற்சி வழங்கப்படும். தற்போது புதிய சாரதிகளை இணைத்துக் கொள்வதால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புகையிரத சாரதிகளில் 50 இற்கும் அதிகமானோர் சேவையில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆகவே பிரச்சினை தீவிரமடையுமே தவிர குறைவடையாது. இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

புகையிரத தொழிற்சங்கங்கள்
துவிச்சக்கர வண்டியை செலுத்துவதை போன்று புதியவர்களை கொண்டு புகையிரதத்தை செலுத்த முடியாது என்பதை அரசாங்கம் முதலில் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள வேண்டும். மருத்துவம், புகையிரதம் ஆகிய அரச சேவைகள் சிரேஷ்டத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறனாக செயற்பட வேண்டிய முக்கிய துறைகளாகும்.

60 வயதை அடைந்த அரச சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற தீர்மானம் ஏனைய அரச சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த தீர்மானம் புகையிரத சேவை துறைக்கு பாரிய நெருக்கடியை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

புகையிரத சாரதிகள் உட்பட ஏனைய சேவையாளர்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் சேவையில் இருந்து ஓய்வு பெற்றால் முதலாம் திகதி சேவையில் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசாங்கம் அறியவில்லையா, அரசாங்கத்திடம் எவ்வித திட்டமிடலும் கிடையாது. புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்கும் முயற்சியில் அரசாங்கம் செயற்படுகிறது.

வினைத்திறனான சேவையை வழங்காவிட்டால் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துங்கள் என மக்கள் கோபத்தில் குறிப்பிடுவார்கள். மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது.

சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சேவையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து புதிய தரப்பினருக்கு முறையான பயிற்சி வழங்கி இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.

புகையிரத சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த புகையிரத தொழிற்சங்க தலைவர் எம்.கே.விதானகே தெரிவித்தார்.

பொதுப் பயணிகள் கடும் விசனம்
அரச சேவையாளர்கள் 31 ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெற்றால் முதலாம் திகதி ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டு சேவை பாதிக்கப்படும் என்பதை அரசாங்கம் அறியவில்லையா, அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறது. புகையிரதத்திற்கு புகையிரத நிலையங்களில் காத்திருக்கும்போது உரிய காரியாலய புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்படுகிறது,

புகையிரதம் இரத்து என உரிய தரப்பினர் அறிவித்ததுடன் அவர்களின் கடமை முடிந்து விட்டது, இதனால் பயணிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பில் அரசாங்கமோ அல்லது துறைசார் தரப்பினரோ கவனம் செலுத்தவில்லை. வழமைக்கு மாறாக புகையிரதங்கள் தாமதமாக வருகின்றன. சேவைக்கு தாமதமாகி செல்லும் போது பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையிலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வது பெரும் போராட்டமாக உள்ளது என புகையிரத பொது பயணிகள் கடும் விசனத்தையும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment