(எம்.எப்.எம்.பஸீர்)
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், நபர் ஒருவரை அடையாளம் காண சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில், வாக்கு மூலம் ஒன்றை அடிப்படையில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஷாப்டர், பொரளை பொது மயானத்தில் அவரது காருக்குள் குற்றுயிராய் கிடந்தபோது, அந்த கார் அருகே இருந்து சந்தேகத்துக்குரிய ஒருவர் சென்றதாக, மயானத்தின் ஊழியர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரது வாக்குமூலத்தின் பிரகாரம் மெல்லிய, உயரமான தோற்றத்தை உடைய ஒருவர் இவ்வாறு சென்றதாக கூறப்படும் நிலையில், குறித்த நபரை அடையாளம் காண தற்போது சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரை 90 பேரின் வாக்குமூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி தற்போது வரையான விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி முக்கிய 4 கோணங்களில் விசாரணைகள் தொடர்வதாக அறிய முடிகின்றது.
இதற்காக சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் 8 சி.ஐ.டி. சிறப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
இதனைவிட பொலிஸ் மற்றும் தேசிய உளவுச் சேவையின் அறிக்கைகளையும் விசாரணையாளர்கள் பெற்று, சந்தேகிக்கத்தக்க அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment