(எம்.ஆர்.எம்.வசீம்)
சந்தையில் ஏற்பட்டிருக்கும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முட்டை இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை. முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 25 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.
சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதால் பேக்கரி உற்பத்திகளை தயாரிப்பதற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முட்டை விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரியளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் இயற்கையாகவே முட்டைக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றன.
மூலப்பொருட்கள் உட்பட முட்டை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்களில் சிலர் முட்டை உற்த்தியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் பெரியளவிலான முட்டை உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பது தாக்கம் செலுத்துவதில்லை. ஏனெனில் அவர்கள் முட்டை விற்பனையின் மூலம் பாரியளவில் லாபம் ஈட்டி வருகின்றனர்.
கேக் உட்பட பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான அளவு முட்டையை பெற்றுக் கொள்ள சந்தையில் முட்டை இல்லை. அதேநேரம் முட்டை விநியோகிப்பதும் தேவையாள அளவில் 50 வீதமாகும். அதனால் சிறிய மற்றும் நடு்த்தர அளவிலான பேக்கரி உற்பத்தியாளர்கள் கேக் உட்பட முட்டை தேவைப்படும் உற்பத்திகளை நிறுத்தி இருக்கின்றனர்.
எனவே முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை குறைப்பதற்கு முட்டை இறக்குமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்து 25 ரூபா அடிடையில் விற்பனை செய்ய முடியும் என்றார்.
No comments:
Post a Comment