தேர்தலுக்கு செல்வது பொருத்தமில்லை, என்றாலும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயார் - ஐக்கிய தேசியக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 29, 2022

தேர்தலுக்கு செல்வது பொருத்தமில்லை, என்றாலும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயார் - ஐக்கிய தேசியக் கட்சி

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு செல்வது பொருத்தம் இல்லை. என்றாலும் எந்த தேர்தலை நடத்துவதற்கு முற்பட்டாலும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி ஷெஹார ஹேரத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் பேதங்களை மறந்து இரண்டு வருடங்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதிவியை ஏற்றுக் கொண்டபோதும் ஜனாதிபதியாக தெரிவான பின்னரும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதிர்க்கட்சியில் இருந்து அதற்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் அவர்கள் தேர்தல் நடத்தக்கோரி மக்களை தூண்டிவருகின்றனர். நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை. ஜனநாயக ரீதியில் இடம்பெறும் எந்தத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட்டிருக்கின்றது. தற்போதும் நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

என்றாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு செல்வது பொருத்தம் இல்லை என்றே தெரிவிக்கின்றோம். இருந்தபோதும் தேர்தல் ஆணைக்குழு எந்த தேர்தலை அறிவித்தாலும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவே இருக்கின்றது.

அத்துடன் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதா, தனித்து போட்டியிடுவதா? யாருடன் கூட்டணி அமைப்பது என்ற எந்த விடயமும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

மொட்டு கட்சியுடன் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைக்கப்போவதாக பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. என்றாலும் அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் தீர்மானிப்போம்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் தொடர்பில் சிந்திக்கவில்லை. மாறாக நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவுத் தேவையை பாதுகாப்பான முறையில் பெற்றுக் கொடுக்க தேவையான வேலைத்திட்டங்களையே மேற்கொண்டு வருகின்றார்.

2023, 2024 ஆம் வருடம் உணவு பாதுகாப்பு பிரச்சினை உலகம் பூராகவும் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அந்த பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்திருக்கின்றார்.

அதன் ஓர் அங்கமாக ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க உதவியின் கீழ் 7 மாவட்டங்களில் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடையின் கீழ் ஒரு ஏக்கருக்கு குறைவாக விவசாயகம் செய்கின்ற விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் விவசாயம் செய்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் நன்கொடையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment