(இராஜதுரை ஹஷான்)
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத இறுதியில் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்தோம் இருப்பினும் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் கடன் காப்புறுதி கிடைப்பனவில் தாமதம் ஏற்ட்டதால் எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் என உத்தேசித்துள்ளோம்.
அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சில தவறான கருத்துக்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தாக்கம் செலுத்தின.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது. எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.
அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் குறைந்தபட்சம் 10 பில்லியன் செலவாகும்.
அரச சேவையாளர்களுக்கு சம்பளம், சுகாதாரம் உட்பட நலன்புரி சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கான நிதியை திரட்டிக் கொள்வது சவாலாக உள்ள நிலையில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் தீவிரமடையும்.
தேர்தலுக்கான நாணயத்தை அச்சிட்டால் பண வீக்கம் மீண்டும் அதிகரிக்கும். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையில் நாணய அச்சிடலை மட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தேர்தலுக்கான நாணயம் அச்சிடுவது அவதானத்திற்குரியது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் மக்களின் அரசியல் தீர்மானம் சிதைவடையும் அரசியல்வாதியாக தேர்தலுக்க நான் தயார் ஆனால் நாட்டு பிரஜையாக தேர்தலை தற்போது நடத்துவது பொருத்தமற்றது என்று குறிப்பிடுவேன் என்றார்.
No comments:
Post a Comment