பிற்போட வேண்டிய தேவை கிடையாது, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 29, 2022

பிற்போட வேண்டிய தேவை கிடையாது, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன - தேர்தல்கள் ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது, தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு திரை மறைவில் இருந்து கொண்டு செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கக்கப்படுகின்றன.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொறுப்பாக்கப்பட்டுள்ளதால் அனைவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒரு வருட காலம் பிற்போட்டபோது அதற்கு அரசியல் கட்சிகள் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றார்.

2018ஆம் ஆண்டு மக்களாணைக்கு அமைவான உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் விடயதானத்தின் அதிகாரத்தை கொண்டு தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போட்டார்.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபை தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதத்தின் முற்பகுதியில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment