அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புது வருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்படும் என மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள சமன்மாலி குணசிங்க பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் தாய்மார்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர் மின்சார நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளதை நாங்கள் கண்டிக்கின்றோம், ஏற்கனவே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அவர் அச்சுறுத்துகின்றார் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த உரிமைகளிற்கான மகளிர் அமைப்பின் செயலாளர் சமன்மாலி குணசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தற்போது எங்கள் பிள்ளைகளின் கல்வியை அழிவுப்பாதையில் கொண்டு செல்கின்றனர் நாட்டை அழித்து விட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் நடைபெறும்போது கல்வியமைச்சரை காண முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மாணவர்களின் தேவைகளை புறக்கணித்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்காக பணத்தை செலவிடுகின்றது. பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை 200 பக்க சிஆர் கொப்பி நான்கு மாதங்களிற்கு முன்னர் 230 ரூபாயாக காணப்பட்டது. தற்போது 510 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை ஆசிரியர்கள் தரமான சிஆர் கொப்பிகளை வாங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் பெற்றோர்களால் சாதாரண சிஆர் கொப்பியை கூட வாங்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment